Saturday, June 19, 2021

காதலிக்காக உருவாக்கப்பட்ட ATM - A to Z தகவல்கள்....

ஸ்காட்லாந்தை சேர்ந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் தன் மனைவிக்கு பிறந்தநாள் பரிசளிக்க விரும்பி, அதற்கு வங்கியில் இருந்து பணம் எடுக்க வரிசையில் நின்றார்


பொறுமையுடன் காத்திருந்த அவர் கேஷ் கவுன்டரை நெருங்கியபோது, ‘டைம் முடிந்து விட்டது’ என்று கூறி கேஷியர் கவுன்டரை அடைத்து விட்டு சென்று விட்டார் .


பெரும் ஏமாற்றம் அடைந்த ஜோன், வெறுங்கையோடு சென்று மனைவியைப் பார்க்க விரும்பவில்லை.

கையில் இருந்த கொஞச ம் சாக்லேட்களை வாங்கிக் கொடுத்து மனைவியை மகிழ்விக்கலாம் 

என நினைத்து சாக்லேட் வெண்டிங் இயந்திரத்தைத் தேடிச் சென்றார்.


இருந்த காசுக்கு கிடைத்த சாக்லேட்டை வாங்கி மனைவிக்கு கொடுத்தாலும், பணம் இருந்தும் நம்மால் விரும்பிய பரிசை மனைவிக்கு அளிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு இருந்தது.





அப்போது அவர் கண் முன்னால் பூட்டிய வங்கிக் கவுண்டரும், இயந்திரத்தில் காசு போட்டவுடன் கொட்டிய சாக்லேட்களும் அவர் மனதில் மீண்டும் மீண்டும் வந்து போயின.


 பணம் போட்டால் சாக்லேட் கிடைக்கும் இயந்திரம் போல், எந்த நேரத்திலும் பணத்தையும் எடுக்க ஒரு மெசின் இருந்தால் எப்படி இருக்கும் என்று அவர் சிந்தனையில் உருவானது தான்  ஏ.டி.எம் .இயந்திரம்.


இவர் உருவாக்கிய முதல் 

ஏ.டி.எம் இயந்திரம்,   1969-ம் ஆண்டு வடக்கு லண்டனில் உள்ள பார்க்லேஸ் வங்கியில் வைக்கப்பட்டது. விரும்பிய நேரத்தில் பணத்தை எடுக்கவும் மிஷினா ?

என அனைவரும் ஆச்சரியப்பட்டனர். 


அதிலும் ஒரு சிக்கல் ஏற்பட்டது. ஜோனின் மனைவியால் ஏடிஎம் அட்டைக்கான ஆறு இலக்க ரகசிய பின் நம்பரை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை.


உடனே செயலில் இறங்கிய ஜோன், அதை நான்கு இலக்கமாக குறைத்தார்.

ஏ.டி.எம் இயந்திரங்கள் காலத்திற்கேற்ப நவீன மாற்றங்களை கண்டு விட்டது என்றாலும், இதற்கெல்லாம் அடிப்படையாக இருந்தது ஜோனின் காதலில் மலர்ந்த அந்த முதல் ஏடிஎம் தான். இன்று உலகளவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏ.டி.எம்கள் உள்ளன.


ஏ.டி.எம் மிஷின் உருவாக காரணமாக இருந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் தன் 84-வது வயதில் கடந்த 2010 மே 19-ம் தேதியன்று காலமானார்.❤

Monday, June 14, 2021

ஹெல்மெட் அணிவதனால் ஏற்படும் நன்மைகள்....

ஹெல்மெட் அணிந்து பயணம் செய்வதில் சில அசௌகரியங்கள் இருந்தாலும் பல நன்மைகள் இருக்கின்றன அதைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.நம் எல்லோருக்கும் விபத்தில் மண்டை ஓட்டைக் காக்க ஹெல்மெட் அணிவது அவசியம் என தெரியும்,அதற்கும் மேலான பயன்கள் ஹெல்மெட் அணிவதால் கிடைக்கும்.




காதுகள் பாதுகாப்பு: இன்றைய சூழலில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் தொடர்ந்து ஹாரன் உபயோகிக்காமல் யாரும் வண்டி ஓட்டுவதில்லை, ஒருகட்டத்தில் அதை நம் காதுகள் பழகிக்கொண்டாலும், அவை சீக்கிரமே பழுதாக வாய்ப்புகள் அதிகம். நல்ல ஹெல்மெட் வாங்கி அணிகிற பட்சத்தில் அது அதிக ஹாரன் மற்றும் வாகன இரைச்சல் சப்தத்தை வடிகட்டி நம் காதுகளுக்கு அனுப்புகிறது.இதனால் காதுகளின் ஆரோக்கியம் மேம்படும்.

 

கண்கள் பாதுகாப்பு: இன்றைய மாசு நிறைந்த சூழலில் கண் பாதுகாப்பு இன்றி அமையாதது,வெளியே ஹெல்மெட் அணியாமல் சென்று வரும் யாரும் தங்கள் கண்களில் வந்து தேங்கும் களிம்பு போன்ற அழுக்கை கவனித்திருப்போம்,அது எத்தனை தீங்கானது?,எத்தனை விதமான தூசுகள் மற்றும் அவற்றை எதிர்க்க சுரக்கும் கண்ணீரின் வடிவம் தான் அந்த களிம்பு,அது போல எத்தனை நாளுக்கு தாக்கு பிடிக்கும் நம் கண்கள்.ஹெல்மெட் அணிந்தால் மட்டும் போதாது,அதன் வைஸரையும் இறக்கி விட்டு உபயோகிக்க வேண்டும்,அதை வாரத்துக்கு ஒரு முறை நன்கு சோப் நீரால் இரு புறமும் துடைத்து உபயோகிக்க வேண்டும். இதனால் நம் கண்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்கும், இரவில் பயணிக்கையில் எத்தனை ஹைபீம் வாகன ஒளி வீச்சிலும் நம் பார்வை மங்கலாக தெரியாது.

 

முக பாதுகாப்பு: மேலே கண்களுக்கு சொன்ன அதே தான்,நம் ஊர் எப்போதுமே கடும் வெயிலுக்கு பெயர் போனது, இன்னும் அக்னி நட்சத்திரம் காலகட்டங்களில் கேட்கவே வேண்டாம். அத்தகைய காலகட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் பயணிப்பது மடமையாகும். காலுக்கு கூட நாம் சாக்ஸ் அணிந்து ஷூ அணிந்தால் தான் அந்த வெயிலின் சூட்டில் இருந்து ஒருவர் தப்ப முடிகிறது என்கையில் ஒருவர் தலையை அந்த முழு வெயிலில் பலிகடா ஆக்குவது என்ன நியாயம்? அப்படி தொடர்ந்து பயணிக்கையில் முகம் தார் போன்ற நிறத்தில்ஆவது நிச்சயம். உதடுகள் கருத்தும் வெடித்தும் போகும்.முகத்தில் படியும் பிசுக்கு புழுதியினால் கட்டிகள்,வெடிப்பு போல பல சரும நோய்கள் வரும் அது கழுத்துக்கும் இறங்கி உடல் முழுக்க பரவ வாய்ப்பு உண்டு.ஹெல்மெட் அணிவதால் அவை தடுக்கப்படும்,ஹெல்மெட் போட்டு பயணித்து, பயணித்து ஒரு கட்டத்தில் அது நமக்குப் பழகிவிட்டால் போதும்.அதை தவிர்க்கவே மாட்டோம்.


 

தலை உஷ்ணமாதலை தடுத்தல்: இன்றைய சூழலில் நாம் உடல் உஷ்ணகுறைபாட்டால் அனுதினம் அவதிப்படுகிறோம்,யாருக்கும் வாரத்துக்கு ஒரு முறையேனும் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கமே இல்லை, ஹெல்மெட் தொடர்ந்து அணிவதால் அதில் இருக்கும் தெர்மல் இன்ஸுலேஷன் மூலம் தலை உஷ்ணமாவது குறையும்,

 

நம்மில் பலருக்கு இரு சக்கர வாகனத்திலும் காரிலும் பயணிக்கையில் ரியர் வியூ மிரர்கள் பார்த்து ஓட்டும் பழக்கம் என்பதே இல்லை ,ஆனால் துபாய் போன்ற நாடுகளில் வாகனம் ஓட்டுபவர் தன்னிச்சையாக எல்லா கண்ணாடிகளையும் பார்த்து ஓட்டாத வரை அவரை ஃபெயில் செய்து கொண்டே இருப்பார்கள். லைசென்ஸும் எடுக்கவே முடியாது, இந்த பழக்கம் வாகனம் ஓட்டுபவர் மற்றும் எதிரே வரும் வாகன ஓட்டியின் பாதுகாப்புக்கு அவசியமாகிறது.ஹெல்மெட் அணிந்து ஓட்டுகையில் இரண்டு ரியர் வியூ மிரர்களையும் பார்க்காமல் ஒருவர் வண்டி ஓட்டவே முடியாது, ஆகையால் ஹெல்மெட் அணிவது விபத்து நேராமல் தடுக்கவும் வழி செய்கிறது.

 

ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுதலைத் தவிர்க்க ஹெல்மெட் அணியும் முன்னர் கர்சீப் கட்டிக்கொள்ளலாம், ஹெல்மெட்டுக்குள் அணியும் ஸ்கால்ப் கேப் வாங்கி அணியலாம், நல்ல நிறுவனத்தின் உறுதியான,ஆனால் எடை குறைவான ஹெல்மெட் வாங்கி அணிகிற பட்சத்தில் தலைமுடி உதிர்தலை தடுக்கலாம்.தலை வலி, கழுத்து வலியில் இருந்தும் தப்பலாம்.

 

ஹெல்மெட் வாங்குகையில் நல்ல தரமான ஹெல்மெட்டை வாங்கவும்,இன்றைய சூழலில் குறைந்தது ஆயிரம் ரூபாய் செலவழித்தால் தான் தலையை நிஜமாகவே விபத்தில் காக்கும் ஹெல்மெட் கிடைக்கும்.அது செலவல்ல ஆயுள் சேமிப்பு என்பதை உணர்ந்து வாங்கி அதை பராமரித்து அணியுங்கள். 300 ரூபாய்க்கு கிடைக்கும் சீனத் தயாரிப்பு ஹெல்மெட்டை 200 ரூபாய்க்கு கொள்முதல் செய்திருப்பார்கள்,அதில் என்ன தரம் இருந்து விடப்போகிறது? எனவே தரமான ஹெல்மெட்டையே வாங்கவும்.

 

இருசக்கர வாகனத்தில் எங்கே சென்றாலும் ஹெல்மெட்டை கொண்டு செல்வதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள், ஸ்கூட்டர்களாக இருந்தால் வண்டியினுள் பூட்டிச்செல்லுங்கள், பைக் எனில் வண்டியின் வெளியே இருக்கும் லாக்கில் பூட்டிச்செல்லுங்கள்,

 

வண்டியின் நிறத்திலேயே ஹெல்மெட் வாங்குவது அதை வண்டியின் அங்கமாகவே நினைக்க வைக்கும், காருக்கு சீட்பெல்ட் எத்தனை அத்தியாவசியமானதோ, இரு சக்கர வாகனத்துக்கு ஹெல்மெட் அத்தியாவசியமானது என உணருங்கள். பின்னர் ஹெல்மெட் உபயோகம் மெல்லப் பழகிவிடும்.




 

எல்லாவற்றுக்கும் மேலாக ஹெல்மெட்டை ஸ்ட்ராப் பட்டை பூட்டாமல் அணிவது பிரயோஜனமே இல்லை, விபத்தில் வாகனம் கீழே விழுந்தவுடன் ஹெல்மெட் எகிறி தூர போய் விழுந்து விடும், எனவே எத்தனை அவசரம் என்றாலும் ஹெல்மெட்டை ஸ்ட்ராப் பட்டை பூட்டி அணியவும்.இன்று நீங்கள் சாலையில் செல்கையில் கவனியுங்கள் பத்துக்கு எட்டு பேர் ஸ்ட்ராப் பட்டையை பூட்டாமல் அணிகின்றனர், நடுசாலையில் பயணிக்கையில் போலீசார் சோதனைக்கு நிற்பதைப் பார்த்து வண்டி ஓடுகையிலேயே ஒற்றைக்கையால் ஹெல்மெட்டை அணிகின்றனர்.இது மிகவும் ஆபத்தானது.

 

#ஹெல்மெட்  #பாதுகாப்பு #உயிர்க்கவசம் #கண் #காது #விபத்து #helmet #protection #eye #ear #accident

Tuesday, June 8, 2021

பூமியின் குளிர்சாதனப் பெட்டி - கடல் : ஜூன் 8 – சர்வதேச கடல் தினம்

 பூமியில் உள்ள மொத்த நீரில் 97 சதவீதம் கடல் நீர் தான். பல வழிகளிலும் நன்மை அளிக்கும் கடல் மற்றும் கடல்சார் உயிரினங்களை பாதுகாக்க ஜூன் 8ம் தேதி, உலக பெருங்கடல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.  உலகில் கடலில் தான் அதிக சரக்கு போக்குவரத்து நடக்கிறது. உலகில் 10 கோடி பேர் தினமும், உணவு, வருமானத்துக்கு கடலை நம்பியே உள்ளனர். கடலில் பல அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன.


மனிதர்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடில் 30 சதவீதத்தை கடல் எடுத்துக்கொண்டு, பூமி வெப்பமடைவதை குறைக்கிறது.

கடல் மூலமாக 70 சதவீத ஆக்சிஜன் கிடைக்கிறது.

உலகில் ஆண்டுதோறும் 80 லட்சம் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலக்கின்றன.

உலகில் 300 கோடி பேருக்கு கடல் உணவு மூலம் புரோட்டின் கிடைக்கிறது.

கடல் தான் நம் பூமியின் குளிர்சாதனப் பெட்டி, அழகிய நீலவண்ண வானம் தெரிவதற்குக் காரணமே கடல் தான். அதை விட மூன்றில் ஒருபங்கு நிலத்திற்கு மழைநீரைக்கொடுத்து வளமாக்குவதும் இந்த கடல்தான் இது பொதுவாக அனைவருக்கு தெரிந்த ஒன்று தான். ஆனால் கடந்த 30 ஆண்டுகளாக நமது புவியின் குளிர்சாதனப்பெட்டி பல இடங்களில் பழுதடைந்து வருகிறது.

கடல் நீரோட்டம் கடல்வாழ் உயிரினங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். விளைநிலத்திற்கு நதிநீரின் முக்கியத்துவம் எப்படியோ அதேபோல் கடல் வாழ் உயிரினங்களுக்கும் கடல் நீரோட்டம் மிகவும் முக்கியமானதாகும்.  1980 ஆம் ஆண்டு அர்ஜென்டினாவைச் சேர்ந்த என்ரிக் ஜொர்மிலோ என்பவர் உலகத்திற்கு ஒரு உண்மையை எடுத்துக் கூறினார். அதாவது தெற்கில் உள்ள பனிப் பாறைகள் உருகி வருகின்றன.




அதுவும் மிகவும் விரைவாக உருகி வருகின்றன. பொதுவாக புவி வெப்பமய மாதல் என்ற ஒரு ஆபத்து மனித குலத்தின் மீது படர்ந்து நிற்கிறது. இது அனைவரும் அறிந்ததே ஆனால் கடலில் உள்ளே இருந்தும் ஒரு ஆபத்து சூழ்ந்து கொண்டு வருகிறது. அது கடல் நீரோட்டங்களில் ஏற்படும் மாற்றம். இதை முதல் முதலாக என்ரிக் ஜொர்மிலோ கூறியபோது, உலகம் நம்பவில்லை. ஆனால் 1998 ஆம் ஆண்டு அமெரிக்க கண்டம் முழு வதும் ஏற்பட்ட வெப்ப மாற்றம் , கடல்பாசி மற்றும் கிரில்ஸ், ஈரால்கள் மற்றும் பவளப்பாறைகள் பாதிக்கப் பட்டன.

இவை அனைத்தும் கடலில் சேரும் கழிவுகளைச் சாப்பிட்டு கடலை தூய்மைப்படுத்தும் பணியைச் செய்யும் உயிரினமாகும். இந்த உயிரினத்தின் பாதிப்பால் அட்லாண்டிக் மற்றும் பசிபிக் கடலில் கரையோரப் பகுதிகள் மிகவும் அதிமாக அசுத்தங்கள் சேர்ந்துவிட்டது. விளைவு ஆசிய மற்றும் அமெரிக்க கடற்கரையோரப் பகுதி நாடுகளில் சுவாசம் தொடர்பான நோய்கள் பெரிதும் பரவத் துவங்கிவிட்டது.     உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டதால், கடல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உலக நாடுகளுக்கு ஏற்படத் துவங்கியது.

இதன் விளைவாக 8 ஜூன் 1992 அன்று பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி ஜெனிரோ என்ற இடத்தில் நடைபெற்ற பூமி கூட்டு மாநாட்டில் (Earth Summit) உலக கடல் தினம் (World Ocean Day) கடைபிடிப்பது என்று முடிவெடுக்கப் பட்டது.

ஐநா சபை கடல் பாதுகாப்பை வலியுறுத்தி 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி நடைபெற்ற மால்டாவில் நடந்த உலக கடற்கரைப் பாதுகாப்பு மாநாட்டின்  கூட்டுக் கூட்டத்தில் முதல் ஜூன் 8 ஆம் தேதி உலக கடல்கள் தினமாக (World Ocean Day) அறிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.  உலகின் வளர்ச்சியடைந்த நாடுகள் கடல் பாதுகாப்பில் தங்களுடைய பங்கை அதிகம் செலுத்தி வருகின்றனர்.

ஆறுகளை தூய்மைப்படுத்துவது போல் நாம் கடல்களை தூய்மைப்படுத்தவேண்டும்.  கடந்த சில ஆண்டுகளாக நமது சென்னைக் கடற்கரையில் குளிர்பிரதேச டால்பின்கள் வருவதற்கு காரணம் என்ன தெரியுமா, வங்காள விரிகுடாக்கடலில் வெப்ப நீரோட்டத்தில் மாற்றம்  ஏற்பட்டதால் அண்டார்டிக் கடற்பகுதியில் உள்ள டால்பின்கள் தடம் மாறத் துவங்கிவிட்டது. இது நிலநடுக்கோட்டுப் பகுதியில் உள்ள நாடுகளில் பருவ நிலையை மாற்றிவிடும்.

வறட்சியை நாம் எதிர்நோக்க வேண்டி இருக்கும்.   இதுபோன்ற ஆபத்துகளை நாம் களைய வேண்டு மென்றால் கடலைப் பாதுகாக்கவேண்டும்.  பாதுகாக்கத் தவறினால் நமது எதிர்காலத் தலை முறைக்கு நீலநிற கடலுக்கு மாற்றாக கருமையான அசுத்தங்கள் படர்ந்த அமில நீரையும் எப்போதும் இருள் சூழ்ந்த வானத்தையும், ஆக்சிஜன் இல்லாத பூமியையும் நாம் விட்டுச் செல்வோம்.

Saturday, June 5, 2021

பேஸ்புக்கில் உங்களை யாராவது கண்காணிக்கிறார்களா? – ஒரு நொடியில் தெரிந்து கொள்ளலாம்....

 உங்கள் முகநூல் பக்கத்தை யாரெல்லாம் பார்த்தவர்கள் என்பதை iOS மொபைல் வைத்திருப்பவர்களும், கம்ப்யூட்டரில் முகநூல் பயன்படுத்துபவர்களும் அறிந்து கொள்ள முடியும். 

ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு துறைக்குள் கால்பதித்தவுடன், தொலைத்தொடர்பு சந்தையில் கடும்போட்டி ஏற்பட்டு மலிவான விலையில் மக்களுக்கு டேட்டா கிடைக்க தொடங்கியது. இதனையடுத்து, சமூகவலைதளங்களின் பயன்பாடும் புதிய உச்சத்தை தொட்டது. குறிப்பாக, டுவிட்டர், பேஸ்புக், யூடியூப், டிக்டாக், ஷேர் ஷாட் ஆகியவை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் சமூகவலைதளங்களாக மாறின.

டுவிட்டர், பேஸ்புக் பொறுத்தவரை நம்முடைய கருத்துகள், புகைப்படங்கள்,சிறிய அளவிலான வீடியோக்களை பகிர்வதை பலரும் வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். பகிரும் புகைப்படங்களுக்கு கிடைக்கும் லைக்குகளுக்கு ஏற்ப, எத்தனை பேர் நம் தகவலை பார்த்துள்ளார்கள் என்பதை யூகித்துக்கொள்ளலாம். பலர் பார்த்துவிட்டு கூட லைக் அல்லது கமெண்ட் என எதுவும் கொடுக்காமல் கூட செல்வார்கள். ஆனால், நம் புரோபைலை எத்தனை பேர் பார்த்துள்ளார்கள்? என்பதை நம்மால் இதுவரை அறிய முடியாத வகையில் இருந்தது.




அந்த குறையை போக்கும் வகையில், பேஸ்புக் புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நம் புரோபைலை யாரெல்லாம் பார்த்துள்ளார்கள்? என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியும். iOS வெர்சன் மொபைல் வைத்திருப்பவர்கள், தங்களது மொபைலில் இருக்கும் பேஸ்புக் செயலியில் இருக்கும் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று அறிந்துகொள்ளலாம். மொபையில் முகநூலுக்கு சென்று பேஸ்புக் செட்டிங்க்ஸ் (Facebook Settings)-க்குள் செல்ல வேண்டும். அங்கு இருக்கும் பிரைவசி ஷார்ட்கட்ஸ் (Privacy Shortcuts)- க்குள் நுழைந்தால் Who viewed my profile என்ற ஆப்சன் இருக்கும்.

 

அதனுள் சென்று உங்கள் முகநூல் புரோபைலை யாரெல்லாம் பார்த்துள்ளார்கள் என்பதை அறிந்துகொள்ளலாம். இந்த அம்சம் 2018 ஆம் ஆண்டு பேஸ்புக் அறிமுகப்படுத்தியது. ஆன்டிராய்டு போன் வெர்சன்களுக்கு இந்த வசதியை இதுவரை முகநூல் அறிமுகப்படுத்தவில்லை. எப்போது அறிமுகப்படுத்தும் என்ற அறிவிப்பும் ஏதும் இல்லை. ஆனால், பேஸ்புக்கை கம்ப்யூட்டரில் பயன்படுத்துபவர் என்றால், நீங்கள் உங்கள் முகநூல் பக்கத்தை பார்த்த நண்பர்களின் விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.




உங்கள் பேஸ்புக் பக்கத்தை முதலில் லாகின் (Log in) செய்யுங்கள். ஹோம் பேஜில் ஏதாவதொரு இடத்தில் கர்சரை வைத்து Right click செய்யுங்கள். அப்போது, view page source என்ற option- யை கிளிக் செய்யுங்கள். தற்பொழுது மற்றொரு Window ஓபன் ஆகியிருக்கும். அதில் [ctrl + f ] பட்டனை சேர்த்து அழுத்தவும். நீங்கள் இதனை செய்தவுடன், ஒரு மூலையில் Search Bar என்ற சிறிய box, Open ஆகியிருக்கும். அந்த Search Bar -ல் friendslist அல்லது BUDDY_ID என்று Type செய்து Enter செய்யவும்.நீங்கள் கொடுத்த எழுத்துக்கள் எங்கெல்லாம் உள்ளதோ அதை கோடிட்டு காட்டும்.

தற்போது காட்டப்படும் லிஸ்டில், “list””1000011 345400-2, “10000043254566 -3 என்ற எண்கள் திரையில் தெரியும். அதாவது இதில் 1000011345400 என்பது நண்பர்களுடைய fecebook account number. ஒவ்வொருவருக்கும் இது போன்று தனித்தனியாக id உண்டு.மேலும் அதன் அருகில் உள்ள -2 அல்லது -3 என்பது உங்கள் FB Profile அவர்கள் எத்தனை முறை பார்த்துள்ளனர் என்ற எண்ணிக்கையாகும்.

திரையில் இருக்கும் இந்த எண்களை காப்பி செய்து, new tab-ல் www.facebook.com -க்கு சென்று, அதன் அருகில் நீங்கள் Copy செய்துவைத்திருக்கும் facebook account number- past செய்யவும். பின்னர், Enter கொடுத்தால், உங்கள் முகநூல் பக்கத்தை பார்த்தவரின் அக்கவுண்ட் திரையில் தோன்றும்.

Thursday, June 3, 2021

சைக்கிளுக்கு “கட் அவுட்” – எரிபொருள் வாகனங்களுக்கு ‘கெட் அவுட்’ சொல்லும் நாடு : ஜூன் 3 - உலக சைக்கிள் தினம்

திடீரென பெட்ரோலுக்குப் பஞ்சம் வந்துவிட்டது என்றால் என்ன செய்வோம்? என்ன விலை என்றாலும் முந்தைய நாள் இரவே க்யூவில் நின்று எவ்வளவு செலவானாலும் பெட்ரோலை வாங்கி நிரப்பிக் கொள்வோமா?! இப்போது நம் பக்கத்து வீட்டுக்காரர் காரை நிறுத்திவிட்டு காலையில் சிரித்தபடி சைக்கிளில் வேலைக்குக் கிளம்பினால் அவரைப்பற்றி என்ன நினைப்போம்?

இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் ஒரு நாடே சைக்கிளுக்கு மாறியிருக்கிறது!

அந்த தேசம் நெதர்லாந்து.

நாட்டில் வசிக்கும் ஒன்றரை கோடி மக்களிடம், இரண்டு கோடி மிதிவண்டிகள் இருக்கும் நாடு அது. தலைநகரான ஆம்ஸ்டர்டாமில் மட்டும், சுமார் 400 கிலோமீட்டர் நீளத்தில் சைக்கிள்கள் ஓட்டும் பாதைகள் கொண்ட நாடு. பொழுதுபோக்குக்காக இல்லாமல், பணிக்கு, பள்ளிக்கு எனத் தங்களது பெரும்பங்கு போக்குவரத்தை மிதிவண்டிகள் மூலமாகவே முறைப்படுத்தி, செயல்படுத்தி வரும் நாடு.



டச்சு சைக்ளிங்’ என்ற பிரத்தியேகமான திட்டத்தை உருவாக்கி, இந்த ஆண்டில் மட்டும் இன்னும் இரண்டு லட்சம் மக்களை, தங்களது கார்களில் இருந்து, மிதிவண்டிக்கு மாற்ற இருக்கும் நாடு நெதர்லாந்து. எளிதாகச் சொல்ல வேண்டும் என்றால் மிதிவண்டிகளுக்கான நாடு தான் இந்த நெதர்லாந்து!

சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டதும் இங்கல்ல, அதிகம் தயாரிக்கப்படுவதும் இங்கல்ல. ஆனால், ஏன் இப்படி மக்கள் சைக்கிளைப் பிரியாமல் பிரியமாக இருக்கிறார்கள் என்பதற்குப் பின்னால் ஒரு நெகிழ்வான வரலாறு இருக்கிறது.

எல்லா வளர்ந்த நாடுகளையும் போலவே இரண்டாம் உலகப்போருக்குப் பின், 1950, 60-களில் நெதர்லாந்தின் கார் மார்கெட்டும் சூடுபிடிக்க, அதன் பெருநகரங்கள் அனைத்திலும் சாலைப் போக்குவரத்து அதிகரித்ததோடு போக்குவரத்து நெரிசல் ஏற்படத் தொடங்கியது.

1970-ம் ஆண்டில், அந்த சிறிய நாட்டில் வாகன விபத்துகளால் மூவாயிரத்திற்கும் அதிகமான மக்கள் இறக்க, அதில் குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை மட்டும் 450. அதிர்ந்து போன அரசு யோசிக்க ஆரம்பித்தது.

தனது குழந்தையை கார் விபத்தில் பறிகொடுத்த பத்திரிகையாளர் விக் லாங்கன்ஹாஃப், “குறைந்த மக்கள்தொகை கொண்ட ஒரு சிறிய நாட்டில் இவ்வளவு விபத்துகளா?” என தன் அனுபவத்தை முன்வைத்து முன்னணி நாளிதழில் எழுதியதோடு, ‘Stop De Kindermood’ எனும் பெயரில் ‘குழந்தை கொலைகளைத் தவிர்த்திடுங்கள்’ என்ற இயக்கத்தையும் தொடங்கினார். இதேநேரத்தில், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட எண்ணெய் போரில் சிமிழி விளக்கிற்கு ஊற்றக்கூட மண்ணெண்ணெய் இல்லாமல் இருண்டுபோன நெதர்லாந்து, பயணப் போக்குவரத்துக்கு சைக்கிளை கையிலெடுத்து அதற்கான வழிமுறைகளையும் நெறிபடுத்தியது.




நாடு முழுவதும் 35,000 கிலோமீட்டர் நீளத்தில் மிதிவண்டி சாலைகள், உலகிலேயே மிகப்பெரிய அண்டர்கிரவுண்ட் சைக்கிள் பார்க்கிங் ஆகியவற்றை உருவாக்கியதோடு, மோட்டார் வாகனங்களை பின்னுக்குத் தள்ளி சைக்கிளுக்கு முன்னுரிமை தரும் பிரத்தியேக சிக்னல்கள், சைக்ளிங் டூரிசம், அதற்காக அரசே நடத்தும் வாடகை சைக்கிள்கள் என்று ஒரு நாடே இன்று உலகிற்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது. இயற்கையிலேயே நெதர்லாந்தின் தட்பவெப்ப சூழல் அதற்கேற்ப அமைந்திருக்க, சைக்கிளிங் தேசம் சாத்தியமானது.

அதற்குப்பின் வாகனங்கள் குறைந்து, சைக்கிள்களின் பயன்பாடு அதிகரிக்க, காற்றில் கரியமிலவாயு குறைந்ததுடன், வாகனங்களின் இரைச்சலும் குறைந்து, சுற்றுச்சூழல் மாசு இதுவரை 40% வரை குறைந்துள்ளது என்று கூறும் நெதர்லாந்து அரசு, சைக்ளிங் தருவிக்கும் ஆரோக்கியத்தின் உபயோகத்தையும் கணக்கிட்டு கூறுகிறது.

தொடர்ந்து சைக்கிள் ஓட்டும்போது தசைகள் வலுவடையும், கொழுப்புகள் எரிக்கப்படும், உடலின் ஆரோகியம் கூடும். கலோரிகள் குறைந்து, உடல் எடையும் குறையும். இவற்றின் காரணமாக, வாழ்க்கைமுறை நோய்களான சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், மாரடைப்பு குறையும் ; வாழ்நாள் நீடிக்கும் என்ற பொதுவான பலன்களுடன், தனது மக்களிடையே புற்றுநோய் 40%, இருதய நோய் 52%, இறப்பு விகிதம் 40% வரை குறைந்துள்ளது என்பதால் எரிபொருள் சிக்கனத்துடன் மருத்துவ செலவுகளும் குறைந்திருக்கின்றன என்கிறது நெதர்லாந்து அரசு. எல்லாவற்றிற்கும் மேலாக மக்களின் மகிழ்ச்சி நிலை 59% அதிகரித்துள்ளது என்றும், உலகின் மகிழ்ச்சியான குழந்தைகள் டச்சு குழந்தைகள்தான் என்றும் மகிழ்வுடன் கூறுகிறது.




இவையனைத்திற்கும் மேலாக தனது நாட்டின் குழந்தைகள் நடைபயிலத் துவங்கும் முன்பே குழந்தைகளுக்கான ‘bakfiets’ என்ற சிறப்பு இருக்கைகள் கொண்ட சைக்கிள்கள், நடைபயிலத் துவங்கியவுடன் குழந்தைகளுக்கு சிறப்பு சைக்ளிங் மற்றும் குழந்தைகள் சிறப்பு பாதைகள், பள்ளிக்கு 90% மாணவர்கள் சைக்கிளில் மட்டுமே பயணம், பாடத்திட்டத்தில் சைக்ளிங்கிற்கு தனி மதிப்பெண்கள் என வருங்கால சந்ததியினரையும் ஆரம்பத்திலிருந்தே ஆரோக்கியத்தின் பாதையில் செல்ல ஆவன செய்கிறது ‘தி சைக்கிளிங் பாரடைஸ்’ என்ற பெயருக்கு எல்லாவிதத்திலும் பொருத்தமாக நிற்கும் இந்த நெதர்லாந்து.

அடுத்தமுறை உங்களில் யாருக்காவது நெதர்லாந்து செல்ல யோசனை இருந்தால், தயவுசெய்து உங்களுக்கு சைக்கிள் ஓட்டத் தெரியுமா என்பதையும் உறுதிசெய்து கொள்ளுங்கள்!


Tuesday, June 1, 2021

Covaxin / Covishield எது பெஸ்ட் ? ஏன்....

கொரோனா தொற்று பரவலை தடுக்க, நாம் தடுப்பூசி போட்டுக்கொள்வது இன்றியமையாததாக உள்ளது. தற்போது நம் இந்திய ஒன்றியத்தில், கோவேக்ஸின் மற்றும் கோவிஷீல்டு என்ற இருவகையான தடுப்பூசிகள் போடப்படுகின்றன. விரைவில் ஸ்புட்னிக் உள்ளிட்ட பல்வேறு தடுப்பூசிகள், மக்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளன.



கோவேக்சின் மற்றும் கோவிஷீல்ட் இடையேயான வேறுபாடு - இதில் எது பெஸ்ட் என தெரிந்து கொள்ளவே இந்த பதிவு


கோவாக்சின் (Covaxin) மற்றும் கோவிஷீல்ட் (Covishield) ஆகிய இரண்டு தடுப்பூசிகளின் உள்ளடக்கமும் கொரோனா வைரஸ்தான்.


பெரும்பாலும் எந்த ஒரு நோயிற்கான தடுப்பு மருந்தாகவும் பயன்படுத்தப்படுவது அந்த நோயை உண்டாக்கும் நோய்க் கிருமியே ஆகும். 


அதாவது அந்த நோய்க் கிருமியின் நோய் உண்டாக்கும் திறனை மட்டுப்படுத்தியோ, அல்லது நீக்கியோ, அந்த நோய்க் கிருமியால் உண்டாகும் நோய்க்கு, அந்த நோய்க் கிருமியே தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.


தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படும் நோய்க் கிருமிகள் கொல்லப்பட்டோ அல்லது செயலிழக்க வைக்கப்பட்டோ (Inactivated)தான் பயன்படுத்தப்படுகிறது. எனவே தடுப்பூசியினால் நமக்கு நோய்வாய்ப்பட வாய்ப்பில்லை.


மாறாக தடுப்பூசிகள் நமது உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அந்த நோய்க்கு எதிராக அதிகரிக்க வைக்கின்றன. 


முதலில் தடுப்பூசி எப்படி வேலை செய்கிறது என்பது புரிந்தால்தான் அது எப்படி நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க செய்கிறது என்று விளங்கும்.


தடுப்பூசிகள் எவ்வாறு வேலை செய்கின்றன...? சுருக்கமாகவும் எளிமையாகவும் விளக்குகிறேன். 


எந்த ஒரு நோய்க் கிருமி நமது உடலில் நுழைந்தாலும், நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பு (Immune system) அந்த நோய்க் கிருமி ஒரு அந்நியப் பொருள் என்று அடையாளம் கண்டு கொள்ளும். உடனடியாக அந்த அந்நிய நோய்க் கிருமியைத் தாக்கி அழிக்கும் வேலையை ஆரம்பிக்கும். 


இதன் விளைவுதான் நோயின்போது நமக்கு ஏற்படும் காய்ச்சல். நமது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு நமது உடலில் நுழைந்த நோய்க்கிருமியை முற்றிலும் அழித்தப் பின் நாமும் காய்ச்சல் நீங்கி நலம் பெறுவோம்.


இந்த நோய் எதிர்ப்பு செயல்பாடுகள் அனைத்தும், நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பின் நினைவு செல்களின் (Memory cells) மூலம் நினைவில் நிறுத்திக் கொள்ளப்படும். 


அந்த நோய்க் கிருமியைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் இந்த நினைவு செல்களில் பதிந்து வைக்கப்பட்டிருக்கும். 


மீண்டும் நமது உடலில் அதே நோய்க் கிருமி நுழைந்தால், இந்த நினைவு செல்கள் உடனடியாக அந்த நோய்க் கிருமி இருக்கும் இடத்திற்கு, அழிக்கும் செல்களை(Killer cells) அனுப்பி, அந்த நோய்க் கிருமியை அழிக்கும். 


இப்படி இயற்கையாக, ஒரு நோய்க் கிருமிக்கு எதிராக நாம் பெறும் நோய் எதிர்ப்பு சக்தியே, பெறப்பட்ட நோய் எதிர்ப்பாற்றல் (Acquired immunity) என்று அழைக்கப்படுகிறது.


இப்படி இயற்கையாக நமக்குக் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை செயற்கையாகத் தூண்டிப் பெறுவதற்கு உதவுவதே தடுப்பூசிகள் ஆகும். 


அதாவது நோய் உண்டாக்கும் திறன் மட்டுப்படுத்தப்பட்ட அல்லது நீக்கப்பட்ட நோய்க் கிருமியை உள்ளடக்கிய தடுப்பு மருந்து நமது உடலில் செலுத்தப்பட்ட உடன்,  நமது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு அந்த நோய்க் கிருமியை கண்டறிந்து அதை அழிக்கும் வேலையை ஆரம்பிக்கும். இதன் விளைவுதான் தடுப்பூசி எடுத்துக் கொண்ட அன்று நமக்கு ஏற்படும் காய்ச்சல், உடல் வலி ஆகியவற்றுக்கான காரணம்.


இவ்வாறு, அந்த நோய்க் கிருமியைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் தடுப்பூசியின் மூலம், நமது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பின் நினைவு செல்களில் பதிய வைக்கப்பட்டு விடும். 


இதன் காரணமாக நமது உடல் உண்மையான நோய்க் கிருமியின் தொற்றுக்கு ஆளாகும் போது தடுப்பூசியின் மூலம் பெறப்பட்ட நோய் எதிர்ப்பாற்றலால் அந்த நோய்க் கிருமி அழிக்கப்பட்டு விடும். 


இதன் மூலம் அந்த நோய்க் கிருமியினால் ஏற்படும் நோய்க்கு ஆளாகாமலேயே நாம், அந்த நோய்க் கிருமிக்கு எதிராக நோய் எதிர்ப்பு ஆற்றலை தடுப்பூசியினால் பெறுவோம். 


சரி, இப்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டைப் பற்றிப் பார்ப்போம்.


கோவாக்சின்


கோவாக்சின் தடுப்பு மருந்து, பாரத் பயோடெக் நிறுவனத்தால் (Bharat Biotech international Ltd), இந்திய மருத்து ஆராய்ச்சிக் கவுன்சில் (ICMR) மற்றும் தேசிய வைராலஜி நிறுவனம் (National Institute of Virology) ஆகியவற்றுடன் இணைந்து தயாரிக்கப்பட்டது.


கோவாக்சின் தடுப்பு மருந்தில், முழுமையான கொரோனா வைரஸ் செயலிழக்க வைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.


கோவிஷீல்ட்


கோவிஷீல்ட் தடுப்பு மருந்து, ஆக்ஸ்ஃபோர்ட்-ஆஸ்ட்ரா ஸெனெகா (Oxford-AstraZeneca) எனும் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, இந்தியாவில் இந்திய சீரம் நிறுவனத்தால் (Serum Institute of India) உற்பத்தி செய்யப்படுகிறது.


கோவிஷீல்ட் தடுப்பு மருந்தில், கொரோனா வைரசின் ஒரு முக்கிய பாகமான முள் புரதத்தை (Spike protein) மட்டும் எடுத்து சிம்பன்சி குரங்குகளில் காணப்படும் அடினோ வைரஸ் (AdenoVirus) எனப்படும் வைரசுடன் குளோனிங் (Cloning) முறையில் இணைத்து பயன்படுத்தப்படுகிறது.


கொரோனா வைரசின் மேல் முள் முள்ளாகத் தோன்றும் பாகம்தான் முள் புரதமாகும். இந்த முள் புரதம்தான் மனித செல்லுடன் கொரோனா வைரஸ் பிணைப்பு ஏற்படுத்த உதவும் முக்கிய காரணியாகும். 


இந்த முள் புரதத்தை நமது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு தடுப்பூசியினால் அடையாளம் காட்டுவதன் மூலம் நாம் கொரோனா வைரசுக்கு எதிராக நோய் எதிர்ப்பைப் பெறலாம். இதுவே கோவிஷீல்ட் செயல்படும் முறையாகும்.


டோஸ் (Dose)


கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் இரண்டுமே இரண்டு தவணையாகப் போடப்படுகிறது.


கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் இரண்டுமே செயலிழக்க வைக்கப்பட்ட கொரோனா வைரஸைக் கொண்டுள்ளதால், அதன் மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்பாற்றல் மிக நீண்ட காலத்திற்கு நீடிப்பதற்காகத்தான் இரண்டு தவணையாக தடுப்பூசி போடப்படுகிறது.


செயல்திறன்


சமீபத்திய ஆய்வின் படி கோவாக்சின் தடுப்பூசியின் செயல் திறன் 81% ஆகவும், கோவிஷீல்டின் செயல் திறன் 90% ஆகவும் உள்ளது.


கொரோனா பெருந்தொற்று மூன்றாம் அலை, நான்காம் அலை என்று நீண்டு கொண்டே செல்லாமல் இருக்க நாம் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல் அவசியம். 


தடுப்பூசியைப் பற்றிய அவநம்பிக்கை, தேவையற்ற பயம் ஆகியவற்றைப் புறம் தள்ளிவிட்டு நாம் அனைவரும் கட்டாயம் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும். 


நாம் போட்டுக் கொண்டதோடு நிற்காமல் நமது குடும்ப உறுப்பினர்களையும் அவசியம் போட்டுக்கொள்ள செய்ய வேண்டும். 


ஏதேனும் மருத்துவ சிக்கல்கள், உடல் நலக் குறைபாடு உள்ளவர்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்து விட்டு பின்னர் அவர் அறிவுரையின் படி போட்டுக் கொள்ளலாம். 


மற்றபடி, எந்தவிதமான மருத்துவ சிக்கல்களும், உடல் நலக் குறைபாடுகளும் இல்லாத ஆரோக்கியமான நபர்கள் எந்தவிதமான தயக்கமும் இன்றி தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.


நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகேயுள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் அரசால் இலவசமாகத் தடுப்பூசி போடப்படுகிறது.


தடுப்பூசி போட்டுக் கொள்வோம் !


கொரோனா எனும் கொடிய நோயை வெல்வோம் !

சூரிய கிரகணம் - கிரகணநாளில் பிறந்த புதிய கண்டுபிடிப்புகள்....

Photo courtesy NBC news வான்பரப்பில், சந்திரன் சூரியனை விட 400 மடங்கு சிறியதாக உள்ளது. இதன் காரணமாக, சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே...