Wednesday, May 21, 2025

தென்கலை - வடகலை பஞ்சாயத்துதான் என்ன?

இன்று சைவம் - வைணவம் ஆகிய இரு மதங்களே இந்தியாவின் பெரும்பான்மை மதங்களாக உள்ளன. இந்த இரண்டு மதங்களுடன் "ஸ்மார்த்தம்"  எனும் வட வேத பிராமணர்கள் தங்களை ஒரு தனிமதமாகக்  கூறிக்கொண்டு சைவம் + வைணவம் + ஸ்மார்த்தம் ஆகியவை இணைந்ததே "ஹிந்து மதம்" என்றும் இந்த ஹிந்து மதத்திற்கு தாங்களே தலைமை என்றும் கூறி வருகின்றனர்.

ஆனால், சைவ மடங்கள் பிராமணர்களின் தலைமையை ஏற்பதில்லை. அனைத்து சைவ மடங்களின் ஆதீனங்களும் (ஸ்மார்த்த) பிராமணர்கள் அல்லாதவர்களே. 

ஆனால், வைணவத்துக்குள் ஸ்மார்த்த பிராமணர்கள் படு வேகமாக ஊடுருவினர். 

ஸ்மார்த்த பிராமணர்களைப் பொறுத்தவரை "வேதம்"தான் அவர்களின் அடிப்படை, ஆசான், கடவுள் எல்லாம். 

வேதம் யாரால் உருவாக்கப்பட்டது ? வேறு யாரால் ...அவர்களால்தான் அதாவது வட வேத ஸ்மார்த்த பிரமணர்களால்தான். 

அந்த வேதத்தின் அடிப்படை என்ன ?  

சுருக்கமாகச் சொன்னால்..."இந்த உலகம், பேரண்டம் உள்ளிட்ட எல்லாம் கடவுளுக்குள் அடக்கம். அந்தக் கடவுள் பிராமணரின் வேத மந்திரத்துக்குள் அடக்கம்"  என்பதே.

ஆக...பிராமணர்களாகிய தாங்கள்தான் கடவுள் என்பதே.

இதே தன்மையில்தான், பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்று மானுடத்தின் உயர்ந்த இடத்தில தாங்களே இருக்கத் தகுதி வாய்ந்தவர்கள் என்றும் கட்டமைத்தனர். ஆனால், சைவம், வைணவம் உண்மையில் பிற்காலத்தில்தான் மதங்களாக ஆகின, தொடக்கத்தில், 


மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்


எனும் தொல்காப்பியம் கூறும் காடும் காடு சார்ந்த இடங்களில் வசித்த மக்களின் கடவுள் "மாயோன்" என்றும் மலையும் மலை சார்ந்த இடங்களில் வசித்த மக்களின் கடவுள் "சேயோன்" என்றும் வழிபட்டு வந்துள்ளனர். 

இதில் மாயோன் வழிபாடுதான் பின்னர் வைணவமாகவும், சேயோன் வழிபாடு சிவனிய சைவமாகவும் உருவெடுத்து...சமண பவுத்தர்கள் இங்கே காலூன்றித் தழைத்து வளர்ந்தபோது இவை இரண்டும் மதங்களாகக் கட்டமைக்கப்பட்டன.

இவ்வாறு கட்டமைத்தவர்கள் வேறு யாருமல்ல வட வேத ஸ்மார்த்த பிராமணர்கள்தான். 

தங்களைத் தற்காத்துக்கொள்ள ஸ்மார்த்த பிராமணியத்தை சைவ வைணவத்துடன் இணைத்து, அரசர்களுடன் நெருக்கம் வைத்து வைத்தே இந்த வேலைகளையெல்லாம் செய்தார்கள் இவர்கள். 

சைவம் - வைணவம் ஆகிய இரண்டும் தமிழில்தான் பத்தி இலக்கியங்கள் படைத்தன என்பதிலிருந்து அவை தமிழர் நெறிகளாகவே இருந்தன என்பது உறுதியாகிறது.

இதில் நாலாயிர திவ்யப் பிரபந்தம் எனும் தனித்தமிழ் பத்தி இலக்கியமே வைணவத்தின் புனித நூல். 

வட வேத ஸ்மார்த்த பிராமணர்களின் ஊடுருவல் காரணமாக தமிழ் பின்னுக்குத் தள்ளப்பட்டு சமஸ்க்ருதம் முன் நிறுத்தப்பட்டது, வைணவர்களின் தனித்தமிழ் பத்தி இலக்கியம் பின்னுக்குத் தள்ளப்பட்டு வேதம் முன் நிறுத்தப்பட்டது.



இந்த நிலையில்தான், ஸ்ரீபெரும்புதூர் எனும் திருப்பெரும்புதூரில் இராமானுஜர் பிறக்கிறார். ஒரு குருநாதரிடம் பாடம் கற்றுக்கொள்ளச் சென்ற போது அவர் கொடுத்த விளக்கம் அபத்தமாக இருக்க மறுத்து வாதிடுகிறார். பிறகு குருவை விட்டு விலகுகிறார்.

அந்தக் குருவே சக சீடர்களை வைத்து இராமானுஜரைக் கொ*லை செய்ய முயற்சிக்கிறார். 

தனித்தமிழ் வைணவத்தில் சம்ஸ்கிருத ஊடுருவல், வேத ஊடுருவல்...இவை  ஏற்படுத்திய சாதிய ஏற்றத்தாழ்வு ஆகியவை மேலும் இராமானுஜரைக் கடும் கோபத்திற்கு ஆளாக்குகின்றன. 

இராமானுஜரை தீர்த்துக்கட்ட பல முயற்சிகள் நடக்கின்றன. விளைவு தலைமறைவாக வாழவேண்டிய நிலை. இவர் தலைமறைவாய் வாழ்ந்த இடத்தில் இவருக்கு உணவு கொடுத்து, அணிவிடை பணிவிடை செய்தவர் ஒடுக்கப்பட்ட குடியைச் சேர்ந்தவர்.

அதன்பிறகுதான் தமிழர் ஆதிக் குடிகளுக்கு வேதங்களைக் கற்றுக்கொடுத்து அதில் உள்ள தவறுகளை வாதிடும் திறனைக் கற்றுக்கொடுத்து, தனித்தமிழ் நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தையும் கற்றுக்கொடுத்து, அவர்களுக்குப் பூணூல் அணிவித்து, நெற்றியில் திருநாமமும் இட்டு ஒரு பெரும் சமூகப் புரட்சி செய்கிறார் இராமானுஜர்.

உடனே வட வேத ஸ்மார்த்த வைணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, பஞ்சாயத்து அரசரிடம் செல்கிறது.

இராமானுஜர் ஒன்றே ஒன்று மட்டும் சொன்னார்..."இவர்கள் எமது சொந்தங்கள். இவர்களும் ஸ்ரீரங்கம் எனும் திருவரங்கத்தில் உள்ளே சென்று வழிபட உரிமை படைத்தவர்கள். நாலாயிர திவ்யப் பிரபந்தம் பாட உரிமை படைத்தவர்கள். வேண்டுமென்றால் வட வேத வைணவர்கள் யாராக இருந்தாலும் இவர்களிடம் என்ன கேள்விகள் வேண்டுமானாலும் கேட்டு வாதம் செய்து வெல்லட்டும்" என்று.

வாத விவாதங்கள் நடக்கின்றன, இராமானுஜரின் படையணியை அசைத்துகூடப் பார்க்க முடியவில்லை வட வேத வைணவர்களால். 

அரசன், இராமானுஜரின் தமிழ் வைணவர்களுக்கு அனுமதி அளிக்கிறார்.

அப்போது வட வேத பிராமணர்கள் இறுதியாக ஒரு கோரிக்கை அரசரிடம் வைக்கிறார்கள். "இன்றிலிருந்து நாங்கள் "வடகலை" அவர்கள் 'தென்கலை". மேலும் நெற்றி நாமத்தை அவர்கள் மூக்கில் இறக்கி பெரிய அளவில் இடவேண்டும். அவ்வாறு இட்டால் அவர்கள் பூசை, வழிபாடு செய்யும் இடத்திற்கு வராமல் நாங்கள் ஒதுங்கிச் சென்றுவிடுவோம்" என்று ஒப்புக்கொள்ளப்படுகிறது. 

அதனால்தான் நெற்றி நாமத்தைப் பெரிய அளவில் போட்டு சிலர் நெஞ்சு, வயிறு என்றெல்லாம் இட்டுக்கொள்வது வழக்கம்.

ஆக....தென்கலை வைணவர்கள் தமிழர்கள் அதிலும் ஒடுக்கப்பட்ட தமிழ்ப் பெருங்குடிமக்களடங்கிய வைணவர்கள். இவர்களின் புனித நூல் தனித்தமிழ் பத்தி இலக்கியங்கள். 

வடகலை வைணவர்கள் சம்ஸ்கிருத வட வேத பிராமணியர்கள்.

இதுதான்..தென்கலை வடகலையின் பின்னணி. 

நெற்றியில் ஏற்றி நாமம் U வடிவில் இட்டிருந்தால் வடகலை, Y வடிவில் மூக்கில் இறக்கி நாமம் இட்டிருந்தால் தென்கலை. 

குறிப்பு : 1800 ம் ஆண்டுகளில் இருந்து இன்றும் தென்கலை - வடகலை குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.

Friday, April 18, 2025

இன்று எந்த செய்தியும் இல்லை....

நாம் வழக்கமாகக் கேட்கும் / பார்க்கும் ஒரு பிரதான சேனல் ’இன்று எந்த நியூஸூமே இல்லை’ என்று சொன்னால் எப்படி இருக்கும்? ‘விளையாடாதீங்க பாஸ் அப்படி ஒரு நாள் சாத்தியமே இல்லை. எங்கேயாவது ஏதாவது நடந்துகிட்டேதான இருக்கும்’ என்கிறீர்களா? உண்மையில் அப்படி ஒரு நாள் வந்தது. இப்போது இல்லை.. 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி.



இந்த சம்பவம் நடந்தது லண்டனில். 24 மணி நேர செய்திச்சேனல்கள், இணையதளங்கள் ஏதும் இல்லாத அந்தக் காலத்தில் மக்கள் செய்தியைத் தெரிந்துகொள்ள இரண்டே வழிகள் தான் இருந்தது. ஒன்று தினசரிகள் மற்றொன்று ரேடியோ. பிபிசி ரேடியோ அப்போது லண்டனில் மிகப் பிரபலம். 1930 ஆம் ஆண்டுதான் பிபிசிக்கு முக்கியமான காலகட்டம். காரணம், அதுவரை நியூஸ் ஏஜென்சிகளிடம் இருந்து செய்திகளை வாங்கி வெளியிட்டுக் கொண்டிருந்த பிபிசி, புதிதாக ஒரு நியூஸ்ரூம் செட்டப்பை அமைத்து சொந்தமாக செய்தி வெளியிடத் தொடங்கியிருந்தது. பிரிட்டிஷ் அரசாங்கம் மக்களுக்கு தெரிவிக்க விரும்பும் செய்திகள் அத்தனையும் பிபிசி வழியாக வெளியிட்டது. அரசாங்க அறிவிப்புகளை மட்டுமே வெளியிடாமல் செய்தி சேகரிப்பவர்கள் பலரை வேலைக்கு வைத்து தொடர்ந்து செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தது.

1930, ஏப்ரல் 18 ஆம் தேதி, புனித வெள்ளியன்று பிரிட்டிஷ் அரசாங்கம் பற்றிய நியூஸ் ஒன்றைத் தான் அன்றைய மாலை நேரச் செய்தியில் வாசிப்பதற்காகத் தயார் செய்திருந்தனர். ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் எக்காரணம் கொண்டும் அந்த நியூஸ் மக்களை சென்று சேரக் கூடாது என்று நினைத்தது. அதனால் எல்லாப் பத்திரிக்கைகள் மற்றும் செய்தி நிறுவனங்களையும் தொடர்பு கொண்டு உடனே அந்தச் செய்தி வெளியிடாமல் தடுக்கச் சொல்லி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தனர். 




புனித வெள்ளி காரணமாக அன்றைக்கு எல்லா பத்திரிக்கைகளும் விடுமுறையில் இருந்தது. ஈஸ்டர் விடுமுறை முடியும் வரை பத்திரிக்கைகள் வெளிவராது என்பதால், பிபிசிக்கு மட்டும் தொடர்பு கொண்டு விஷயத்தை சொன்னார்கள் பிரிட்டிஷ் அதிகாரிகள். துரதிஷ்டவசமாக அன்றைக்கு அந்த நியூஸை விட்டால் பிபிசியிடம் வேறு செய்தி இல்லை.

மாலை 6:30 மணி. செய்திக்காக எல்லோரும் பிபிசி ரேடியோவிற்கு காது கொடுத்து காத்திருக்க, செய்தி வாசிப்பவர் குரல் ஒலிக்கத் தொடங்குகிறது. “Good Evening. Today is Good Friday. There is no news” அவ்வளவு தான். அதற்கு பிறகு செய்தி நேரம் முழுவதும் பியானோ இசை மட்டுமே ஒலித்தது. வரலாற்றில் அந்த நாள் இடம்பிடித்தது

Monday, April 14, 2025

தமிழ் ஆண்டுகளுக்கு ஏன் சமஸ்கிருதப் பெயர்?

தமிழ் ஆண்டுகள் ஒவ்வொன்றும் சமஸ்கிருதப் பெயர்களாலேயே குறிப்பிடப்படுகின்றன. அறுபதாண்டுகளுக்கு ஒரு முறை மீண்டும் பயன்படுத்தப்படும் இந்தப் பெயர்ப் பட்டியல் தமிழ் ஆண்டுகளோடு இணைந்தது எப்படி என்பதை விவரிக்கிறது இந்தச் செய்திக் கட்டுரை...



தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஏப்ரல் 14ஆம் தேதி  நெருங்கும்போதும், "தமிழ் புத்தாண்டு என்பது தை மாதம் பிறக்கிறதா அல்லது சித்திரை மாதம் பிறக்கிறதா?" என்ற சர்ச்சையோடு, தமிழ் ஆண்டுகளுக்கு சமஸ்கிருதப் பெயர்களை ஏன் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வியும் அவை எப்போதிருந்து புழக்கத்திற்கு வந்தன என்ற கேள்வியும் எழுப்பப்படும். இது ஒரு முடிவில்லாத சர்ச்சை ஆகவே தொடர்ந்து வருகிறது. தமிழ் ஆண்டுகளுக்கு சமஸ்கிருதப் பெயர்களைப் பயன்படுத்தும் வழக்கம் துல்லியமாக எப்போதிருந்து துவங்கியது, ஏன் துவங்கியது என்பது குறித்த தெளிவான தகவல்கள் கிடையாது.

இந்தியாவைப் பொறுத்தவரை, ஆண்டுகளைக் குறிப்பிட பல்வேறு காலகட்டங்களில் தோன்றிய பல்வேறு காலக் கணிப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கலி வருடம், கொல்லம் வருடம் (கேரளத்தில் பயன்படுத்தப்படும் முறை. உதயமார்த்தாண்ட வர்மாவால் துவங்கப்பட்டதாக கருதப்படுகிறது. கி.பி. 823ஆம் ஆண்டிலிருந்து இந்த முறையை பயன்படுத்த ஆரம்பித்தனர்), விக்ரமாதித்ய வருடம் (விக்ரமாதித்ய மன்னரால் கி.மு. 57 துவங்கப்பட்டதாகக் கருதப்படும் வருடம்), சாலிவாகன சகாப்தம் (சாலிவாகனன் எனப்படும் சாதவாகன மன்னன் கி.பி. 78ல் துவங்கி வைத்த முறை), ஃபஸ்லி (அக்பர் அரியணை ஏறிய ஆண்டில் துவங்குவது. அறுவடையை மையமாகக் கொண்ட காலக் கணிப்பு முறை), ஹிஜ்ரி (இஸ்லாமிய காலக்கணிப்பு முறை) என்று நீளும் கணக்கீட்டு முறைகளில் இந்த சம்வத்சரம் எனப்படும் 60 ஆண்டு சுழற்சி முறையும் ஒன்றாக இருந்தது. இது தவிர, தமிழ்நாட்டில் திருவள்ளுவர் ஆண்டு என்ற கணக்கீட்டு முறை தமிழ்நாடு அரசால் பின்பற்றப்படுகிறது. கிரிகேரியன் நாட்காட்டியோடு ஒப்பிட்டால், திருவள்ளுவர் ஆண்டு 31 ஆண்டுகள் அதிகமாக இருக்கும். உதாரணமாக, 2023ஆம் ஆண்டு என்பது திருவள்ளுவர் ஆண்டில் 2054ஆம் ஆண்டாகும். 1972 முதல் இது தமிழ்நாடு அரசின் அதிகாரபூர்வ ஆண்டு முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது.

மற்ற கணக்கீட்டு முறைகளுக்கும் சம்வத்சர முறைக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு. மற்ற ஆண்டு முறைகள், தொடர்ச்சியான எண்களைக் கொண்டவை. ஆனால், இந்த சம்வத்சர முறை, எண்களுக்குப் பதிலாக 60 பெயர்களைப் பயன்படுத்துகிறது. ஆகவே, 60 ஆண்டுகள் முடிந்த பிறகு, மீண்டும் முதலில் இருந்து அந்தப் பட்டியல் துவங்கும். இந்தப் பட்டியலில் முதல் பெயர் 'பிரபவ' என்று துவங்குகிறது. 'அக்ஷய' என்ற பெயரோடு இந்தப் பட்டியல் முடிவுக்கு வருகிறது.

வராகமிக்ரர் எழுதிய வானியல் நூலான பிருகத் சம்ஹிதையில்தான் (கி.பி. 505 - 587) முதன்முதலாக, இந்த 60 பெயர்களும் நாம் இப்போது பயன்படுத்தும் வரிசையில் காணப்படுகின்றன. சம்வத்சரம் என்பது ஒரு ஆண்டைக் குறிக்கிறது. ஆனால், 'வருஷ' என்ற வார்த்தையால் குறிக்கப்படும் ஆண்டிற்கும் 'சம்வத்சரம்' என்ற வார்த்தையால் குறிக்கப்படும் ஆண்டிற்கும் வித்தியாசம் உண்டு. 'வருஷம்' என்பது பூமியின் ஒரு சூரிய வருடத்தைக் குறிக்கிறது. ஆனால், 'சம்வத்சரம்' என்பது வியாழனின் சுழற்சியை மையமாகக் கொண்டது. அதாவது, ஒரு சம்வத்சர ஆண்டு என்பது 361.026721 நாட்களைக் கொண்டது. பூமியை அடிப்படையாகக் கொண்ட சூரிய ஆண்டைவிட, 4.232 நாட்கள் குறைவு. இதனைச் சரிசெய்ய, ஒவ்வொரு 85 சம்வத்சர ஆண்டுகளுக்கும் ஒரு முறை, இந்த 60 பெயர்களில் ஒன்று தாண்டிச் செல்லப்படும். அதாவது அந்த ஆண்டு 'பிரபவ' என்ற பெயர் சூட்டப்படவிருந்தால், அதற்கு அடுத்த பெயரான 'விபவ' என்ற பெயர் சூட்டப்படும். ஆனால், காலப்போக்கில் இது கைவிடப்பட்டது. சம்வத்சரமும் வருஷமும் ஒரே காலகட்டத்தைக் குறிப்பதாக மாறிவிட்டன.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14ஆம் தேதி நெருங்கும்போது, தமிழ் ஆண்டுகளுக்கு சமஸ்கிருதப் பெயர்களைப் பயன்படுத்துவது குறித்து எதிர்ப்புக் குரல்கள் எழுகின்றன. இதனை அப்படிப் பார்க்கத் தேவையில்லை என்கிறார்கள் தமிழ் ஆய்வாளர்கள்.

"தமிழ் இங்கிருந்து வந்ததாகவும் சமஸ்கிருதம் வெளியில் இருந்து வந்ததாகவும் சொல்லி, இந்த எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள். தமிழ்நாட்டில் சங்க காலத்திலேயே சமஸ்கிருதமும் தமிழும் நெருக்கமாக இருந்திருக்கின்றன. இரு மொழிகளுக்கும் இடையில் ஒரு நீண்ட காலத் தொடர்பு இருக்கிறது. தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் தொடர்பில்லை என்பவர்கள் மொழியியலாளர்கள் அல்ல. அவர்கள் தாம் சார்ந்திருக்கும் அரசியல் சித்தாந்தம் சார்ந்து அந்தக் கருத்தைச் சொல்கிறார்கள். ஆகவே இந்தப் பெயர்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு நீண்ட காலத் தொடர்ச்சி இருக்கிறது" என்கிறார்கள்.  "கல்வெட்டுகளைப் பொறித்த மன்னர்கள் இதில் தெளிவாக இருந்தார்கள். அவர்கள் இந்த சுழற்சி ஆண்டைக் குறிப்பிட்டாலும் சக ஆண்டு, சாலிவாகன ஆண்டு போன்ற பிற ஆண்டுகளையும் சேர்த்தே குறிப்பார்கள். இதனால், அவர்கள் எந்த வருடத்தைச் சொல்கிறார்கள் என்பதில் குழப்பம் கிடையாது. ஆனால், 19ஆம் நூற்றாண்டில் பதிப்பாளர்களாக இருந்தவர்கள், தங்கள் புத்தகங்களில் கிரிகேரியன் ஆண்டையோ, வேறு ஆண்டையோ குறிக்காமல், வெறும் இந்தப் பெயர்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இப்போது 150 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், இவை குழப்பத்தை ஏற்படுத்துகின்றன" என்கிறார்கள்.

ஆனால், காலத்தைக் குறிப்பிட தங்களுக்கென தொடர்ச்சியான ஒரு ஆண்டு முறையை தமிழர்கள் ஏன் உருவாக்கவில்லை என்பது ஒரு சுவாரஸ்யமான கேள்வி.

Coutesy : BBC

Saturday, March 22, 2025

மெ(மே)ன்மை நாயகன் - காதல் மன்னன் ஜெமினி!!!




காதலித்து மணந்தவளை இறந்து விட்டாள் என நினைத்து   சந்தர்ப்பவசத்தால், வேறு ஒரு பெண்ணை மணப்பார். இறந்தவளாக கருதப்பட்டவர் பார்வை இழந்த நிலையில் ஒரு குழந்தையோடு வருவார்.

இதுபற்றி தெரியவர, இதயம் பலஹீனமான இரண்டாவது மனைவியிடம் முதல் மனைவி வரலாற்றைப் பற்றிச் சொன்னால் அவர் குழந்தையை விட்டுவிட்டு இறந்து விடுவாரோ என்ற பயத்தில் இரு மகன்களுக்கு தந்தையாய் தவிப்பார். 

அதைவிட இன்னும் கொடுமையாக,  தான் உயிரோடு இருப்பதையே முதல் மனைவியிடம் சொல்ல முடியாமல் நண்பர் பாலு என்கிற சிவாஜியின் அன்பு கட்டளையால் தடை விதிக்கப்பட்டு நிறுத்தப்படுவார்.

தமிழ் சினிமா கண்ட எண்ணற்ற ஆச்சரியமான பாத்திரங்களில் ஒன்று,  பார்த்தால் பசி தீரும் படத்தில் ஜெமினி கணேசன்ஏற்றிருந்த வேலு பாத்திரம். 

எல்லாவற்றையும் விட இரு ஆண்களுக்கு இடையிலான நட்பின் ஆழத்தை, வலிமையை எப்பேர்ப்பட்ட சூழலிலும் யாராலும் தகர்க்க முடியாது என்பதை மிக அற்புதமாக கட்டிய முதல் சமூக தமிழ் திரைப்படம். 

காட்சிக்கு காட்சி  ஜெமினியிடம் நடிப்பில் ஒரு படி விழாமல் இருக்க வேண்டுமே என்ற தவிப்பை நடிகர் திலகத்துக்கே உருவாக்கி இருப்பார் ஜெமினிகணேசன்..

மற்ற முன்னணி நடிகர்களுக்கு இல்லாத ஒரே ஒரு சிறப்பம்சம் ஜெமினியிடமிருந்தது. 

தனித்து கதாநாயகன் என்றால் மிஸ்ஸியம்மா, பூலோக ரம்பை சதாரம், மணாளனே மங்கையின் பாக்கியம், கணவனே கண்கண்ட தெய்வம், வஞ்சிக்கோட்டை வாலிபன், கல்யாண பரிசு என பட்டையை கிளப்பி இருப்பார். 

ஆடிப்பெருக்கு, தேனிலவு கைராசி, பாக்கியலட்சுமி, கற்பகம், ராமு போன்ற படங்களில் அலட்டலே இல்லாமல் மென்மையான கதாநாயகனாக தன்னை வெளிப்படுத்திய விதம் பார்த்தவர்களுக்கு மட்டுமே பளிச்செனவும் புரியும்..

இன்னொரு டாப் ஸ்டாருடன் இணையான பாத்திரம் என்றாலும் துவண்டுவிடாமல்  அதிலும் துவம்சம் செய்து விடுவார் ஜெமினி.

அதிலும் நடிகர் திலகம் சிவாஜியுடன் என்றால்,பதிபக்தி, பாசமலர், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், பாவமன்னிப்பு.. அது ஒரு பெரிய பட்டியல். 

ஆனால் எம்ஜிஆருடன் முகராசி என்ற ஒரே படத்தில் மட்டுமே ஜெமினியால் நடிக்க முடிந்தது. எம்ஜிஆரை விட மூன்று வயது இளையவரான ஜெமினி அந்த படத்தில் எம்.ஜி.ஆருக்கு அண்ணனாக நடித்தார்.

1940களில் அறிமுகமாகி 2000-க்கு மேலும் நடித்து, நீண்ட நெடிய திரை வரலாற்றுக்குச் சொந்தக்காரர், ஜெமினி என்கிற ஜாம்பவான்.

அவ்வை சண்முகியில் ஐயர் மாமி வேடத்தில் வரும் கமலஹாசனை பார்த்து உருகுவதையும், மேட்டுக்குடி படத்தில் கார்த்தி கவுண்டமணியுடன் சேர்ந்து லூட்டி அடிப்பதையும் பார்த்து ரசித்த இந்த தலைமுறைக்கு காதல் மன்னன் என போற்றப்படும்  ஜெமினியின் ஆரம்பகால வரலாறு எவ்வளவு பொருத்தமாக இருந்தது என்பது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

படித்தது பிஎஸ்.சி., கெமிஸ்ட்ரி. ஆனால் கல்லூரி விரிவுரையாளர் உள்ளிட்ட சில பணிகளுக்கு பிறகு, செய்ததோ ஜெமினி ஸ்டுடியோசில் புதுமுகத்திற்காக நடிகர்களை தேர்வு செய்யும் பணி. 

அதனால்தான் ராமசாமி கணேசன் என்பவர், ஜெமினி என்ற அடையாளத்துடன் ஜெமினி கணேசனானார்.

சிவாஜியை போல் முதல் படத்திலேயே வெற்றிக்கொடி நாட்டாமல், எம்ஜிஆரை போலவே துண்டு துண்டு ரோல்களில் தலைகாட்டி கடுமையாக போராடியவர் ஜெமினி.

1947ல் மிஸ் மாலினி படத்தில் சின்ன ரோலில் அறிமுகமான ஜெமினிக்கு கதாநாயகன் ரோல் உடனே கை கூடி விடவில்லை. ஆனால் கதாநாயகியான அப்போதைய முன்னணி நடிகை புஷ்பவள்ளியையே காதலால் ஸ்வாகா செய்து துணைவியாக்கிக்கொண்டார் . 

அலுமேலு என்ற பெண்ணை எட்டு ஆண்டுகளுக்கு முன்பே மணந்து பெண் குழந்தைகளை பெற்றிருந்த நிலையில்தான் இப்படி புஷ்பவள்ளி வந்து இணைந்தார்.

1952ல் ஆர்.எஸ். மனோகர் கதாநாயகனாக நடித்த தாய் உள்ளம் படத்தில் ஜெமினி கலக்கிய வில்லன் ரோல்தான் அவர் திரையுலக வாழ்க்கையில் டர்னிங் பாயிண்ட்.

அதே ஆண்டு துவங்கிய மனம்போல் மாங்கல்யம் படத்திலோ, முதன் முறையாக கதாநாயகன் வேடம்.. விடுவாரா? நடிப்பில் அசத்தினார்.

இன்னொரு பக்கம் படத்தின் கதாநாயகியான 16 வயது மைனரான சாவித்திரி ஏற்கனவே இரண்டு பேரை மணந்த ஜெமினியிடம் மனதைப் பறிகொடுத்தார். படப்பிடிப்பின்போதே காதல் வலை வீசி கரம் பிடித்தார்.

ஜெமினி-சாவித்திரி விவகாரத்தை பொருத்தவரை ஆரம்பத்தில் மிகமிக ரகசியமாகவே இருந்திருக்கிறது.

ஒரு விளம்பர ஒப்பந்தத்தில் சாவித்திரி கையெழுத்து விடும்போது சாவித்திரி கணேஷ் என்று கையத்திட்டபோது தான் வெளியே தெரிய வந்திருக்கிறது.

இதனிடையே  2-வது மனைவி புஷ்பவள்ளி, ஒரு பெண் குழந்தையை பெற்றுக் கொடுத்தார். இந்த குழந்தைதான் வளர்ந்து ரேகா என பெயர் பெற்றுபின்னாளில் இந்தி திரைலயுலக கனவுக்கன்னியாக திகழ்ந்தது.

இந்த சூழலுக்கு மத்தியில்தான்  தொடர்ந்து கதாநாயகனாக நடித்து , ஆக்சன் ஹீரோ எம்ஜிஆருக்கும் நடிகர் திலகத்துக்கும் நடுவில் காதல் மன்னனாக அற்புதமாக வெற்றிக்கொடி நாட்டினார் ஜெமினி.

காலங்களில் அவள் வசந்தம்.. மயக்கமா கலக்கமா,..

மன்னவனே அழலாமா.. 

நிலவே என்னிடம் மயங்காதே…

என நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் இன்று வரை ஜெமினியை ரசிகர்கள் மத்தியில் தாலாட்டத் தவறுவதேயில்லை.. 

ஜெமினியை பொறுத்தவரை எந்த பிரபல நடிகருடனும் சேர்ந்த நடிக்க தயங்காதவர்.. கொடுத்த பாத்திரத்தை கனக்கச்சிதமாக செய்துவிட்டு போகக்கூடியவர்.

வல்லவனுக்கு வல்லவன் படத்தில் அசோகனுக்கு எதிராக வில்லன், சித்தி படத்தில் எம்ஆர் ராதா- பத்மினி ஜோடிக்கிடையே ஒரு சிறிய பாத்திரம்.. ஜெய்சங்கரின் நூற்றுக்கு நூறு படத்தில் காலேஜ் பிரின்சிபல் ரோல்.. முத்துராமனின் சுடரும் சூறாவளியில் பொறுப்பற்ற குடிகார சூதாடித் தந்தை ரோல்..இப்படி நிறைய உண்டு..

சோகம் என்னவென்றால், இத்தகைய சமரசமே அவருக்கு திரையுலகின் முன்னணி கதாநாயகன் என்ற நிலையிலிருந்து இறக்கி விடுவதற்கான வழியாகவும் அமைந்து விட்டது..

இடையில் நடந்த ஒரு ஆறுதலான விஷயம், ஜெமினி ஆரம்பகட்ட மற்றும் இறுதி கட்டத்திற்கு இடையிலான திரை வாழ்க்கையை  இயக்குனர் கே.பாலச்சந்தர் அற்புதமாக செதுக்கியதுதான் 

பூவா தலையா, தாமரை நெஞ்சம், காவியத்தலைவி, இரு கோடுகள் புன்னகை, வெள்ளி விழா என கேபி- ஜெமினி காம்பினேஷனில் பல படங்கள் கிளாசிக் ரகமாகவே அமைந்தன.

1974-ல் தான் சொந்தமாக தயாரித்த நான் அவனில்லை படத்தில் வித விதமான கெட்டப்புகளில் வந்து பெண்களை மணந்து ஏமாற்றி செல்லும் பாத்திரத்தில் அவரது நடிப்பு அசத்தல் ரகம்..

ஜெமினி-KB - கமல் என்ற மூன்று ஆளுமைகளுக்குமே ஏதோ ஒரு வகையில் பிணைப்பு உண்டு. 'உன்னால் முடியும் தம்பி' படம் வரை வரை அந்த இணைப்பு தொடர்ந்தது.  

கமலின் முதல் படம் ஜெமினியின் களத்தூர் கண்ணம்மா.. அன்று முதலே அவர் கமலை தனது பிள்ளைபோலவே கருத ஆரம்பித்தார்.. பார்த்தால் பசிதீரும் படத்திலோ ஜெமினியின் இரட்டை குழந்தைகளாக கமலுக்கு முதன்முறையாக  டூயல் ரோல் வேடம்.. 

பெற்றெடுக்காத பிள்ளை ஜெமினியால் குறிப்பிடப்பட்ட  கமலும், பெற்றடுத்த ரேகாவும் ஒரே ஆண்டில் பிறந்தவர்கள்.. இன்றுவரை பொலிவு மங்காதவர்கள்..

மண வாழ்க்கையை பொருத்தவரை  ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டை பின்பற்றாதவர் ஜெமினி.

ஒரே நேரத்தில் மூன்று பெண்களுடன் மண வாழ்க்கை நடத்தினாலும் சமூகத்திடமிருந்து  எதையும் மறைக்கவில்லை. 

அவர் தன்னுடைய எந்த வாரிசையும் சரியாக பராமரிக்க தவறியதில்லை. 

அவர்களுக்கென்று நேரம் ஒதுக்கி நன்றாகப் பழகி விளையாடி பெரிய அளவில் படிக்க வைத்தார். சம்பாதித்த சொத்துக்களை எல்லாம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து தன் வாரிசுகளுக்கு பொருளாதார பாதுகாப்பு ஏற்படுத்தி வைத்தார்.

நம்மைப் பொறுத்தவரையில் ஃபேவரைட் படங்கள் என்றால், மிஸ்ஸியம்மா, பார்த்தால் பசி தீரும், ஆடிப்பெருக்கு, கைராசி, வாழ்க்கைப் படகு, நான் அவன் இல்லை போன்றவை.   

திரை உலகில் காதல் மன்னன் என்று அழைக்கப்பட்ட ஜெமினி கணேசனின் 20- ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று

தென்கலை - வடகலை பஞ்சாயத்துதான் என்ன?

இன்று சைவம் - வைணவம் ஆகிய இரு மதங்களே இந்தியாவின் பெரும்பான்மை மதங்களாக உள்ளன. இந்த இரண்டு மதங்களுடன் "ஸ்மார்த்தம்"  எனும் வட வேத ...