Friday, April 18, 2025

இன்று எந்த செய்தியும் இல்லை....

நாம் வழக்கமாகக் கேட்கும் / பார்க்கும் ஒரு பிரதான சேனல் ’இன்று எந்த நியூஸூமே இல்லை’ என்று சொன்னால் எப்படி இருக்கும்? ‘விளையாடாதீங்க பாஸ் அப்படி ஒரு நாள் சாத்தியமே இல்லை. எங்கேயாவது ஏதாவது நடந்துகிட்டேதான இருக்கும்’ என்கிறீர்களா? உண்மையில் அப்படி ஒரு நாள் வந்தது. இப்போது இல்லை.. 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி.



இந்த சம்பவம் நடந்தது லண்டனில். 24 மணி நேர செய்திச்சேனல்கள், இணையதளங்கள் ஏதும் இல்லாத அந்தக் காலத்தில் மக்கள் செய்தியைத் தெரிந்துகொள்ள இரண்டே வழிகள் தான் இருந்தது. ஒன்று தினசரிகள் மற்றொன்று ரேடியோ. பிபிசி ரேடியோ அப்போது லண்டனில் மிகப் பிரபலம். 1930 ஆம் ஆண்டுதான் பிபிசிக்கு முக்கியமான காலகட்டம். காரணம், அதுவரை நியூஸ் ஏஜென்சிகளிடம் இருந்து செய்திகளை வாங்கி வெளியிட்டுக் கொண்டிருந்த பிபிசி, புதிதாக ஒரு நியூஸ்ரூம் செட்டப்பை அமைத்து சொந்தமாக செய்தி வெளியிடத் தொடங்கியிருந்தது. பிரிட்டிஷ் அரசாங்கம் மக்களுக்கு தெரிவிக்க விரும்பும் செய்திகள் அத்தனையும் பிபிசி வழியாக வெளியிட்டது. அரசாங்க அறிவிப்புகளை மட்டுமே வெளியிடாமல் செய்தி சேகரிப்பவர்கள் பலரை வேலைக்கு வைத்து தொடர்ந்து செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தது.

1930, ஏப்ரல் 18 ஆம் தேதி, புனித வெள்ளியன்று பிரிட்டிஷ் அரசாங்கம் பற்றிய நியூஸ் ஒன்றைத் தான் அன்றைய மாலை நேரச் செய்தியில் வாசிப்பதற்காகத் தயார் செய்திருந்தனர். ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் எக்காரணம் கொண்டும் அந்த நியூஸ் மக்களை சென்று சேரக் கூடாது என்று நினைத்தது. அதனால் எல்லாப் பத்திரிக்கைகள் மற்றும் செய்தி நிறுவனங்களையும் தொடர்பு கொண்டு உடனே அந்தச் செய்தி வெளியிடாமல் தடுக்கச் சொல்லி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தனர். 




புனித வெள்ளி காரணமாக அன்றைக்கு எல்லா பத்திரிக்கைகளும் விடுமுறையில் இருந்தது. ஈஸ்டர் விடுமுறை முடியும் வரை பத்திரிக்கைகள் வெளிவராது என்பதால், பிபிசிக்கு மட்டும் தொடர்பு கொண்டு விஷயத்தை சொன்னார்கள் பிரிட்டிஷ் அதிகாரிகள். துரதிஷ்டவசமாக அன்றைக்கு அந்த நியூஸை விட்டால் பிபிசியிடம் வேறு செய்தி இல்லை.

மாலை 6:30 மணி. செய்திக்காக எல்லோரும் பிபிசி ரேடியோவிற்கு காது கொடுத்து காத்திருக்க, செய்தி வாசிப்பவர் குரல் ஒலிக்கத் தொடங்குகிறது. “Good Evening. Today is Good Friday. There is no news” அவ்வளவு தான். அதற்கு பிறகு செய்தி நேரம் முழுவதும் பியானோ இசை மட்டுமே ஒலித்தது. வரலாற்றில் அந்த நாள் இடம்பிடித்தது

Monday, April 14, 2025

தமிழ் ஆண்டுகளுக்கு ஏன் சமஸ்கிருதப் பெயர்?

தமிழ் ஆண்டுகள் ஒவ்வொன்றும் சமஸ்கிருதப் பெயர்களாலேயே குறிப்பிடப்படுகின்றன. அறுபதாண்டுகளுக்கு ஒரு முறை மீண்டும் பயன்படுத்தப்படும் இந்தப் பெயர்ப் பட்டியல் தமிழ் ஆண்டுகளோடு இணைந்தது எப்படி என்பதை விவரிக்கிறது இந்தச் செய்திக் கட்டுரை...



தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஏப்ரல் 14ஆம் தேதி  நெருங்கும்போதும், "தமிழ் புத்தாண்டு என்பது தை மாதம் பிறக்கிறதா அல்லது சித்திரை மாதம் பிறக்கிறதா?" என்ற சர்ச்சையோடு, தமிழ் ஆண்டுகளுக்கு சமஸ்கிருதப் பெயர்களை ஏன் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வியும் அவை எப்போதிருந்து புழக்கத்திற்கு வந்தன என்ற கேள்வியும் எழுப்பப்படும். இது ஒரு முடிவில்லாத சர்ச்சை ஆகவே தொடர்ந்து வருகிறது. தமிழ் ஆண்டுகளுக்கு சமஸ்கிருதப் பெயர்களைப் பயன்படுத்தும் வழக்கம் துல்லியமாக எப்போதிருந்து துவங்கியது, ஏன் துவங்கியது என்பது குறித்த தெளிவான தகவல்கள் கிடையாது.

இந்தியாவைப் பொறுத்தவரை, ஆண்டுகளைக் குறிப்பிட பல்வேறு காலகட்டங்களில் தோன்றிய பல்வேறு காலக் கணிப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கலி வருடம், கொல்லம் வருடம் (கேரளத்தில் பயன்படுத்தப்படும் முறை. உதயமார்த்தாண்ட வர்மாவால் துவங்கப்பட்டதாக கருதப்படுகிறது. கி.பி. 823ஆம் ஆண்டிலிருந்து இந்த முறையை பயன்படுத்த ஆரம்பித்தனர்), விக்ரமாதித்ய வருடம் (விக்ரமாதித்ய மன்னரால் கி.மு. 57 துவங்கப்பட்டதாகக் கருதப்படும் வருடம்), சாலிவாகன சகாப்தம் (சாலிவாகனன் எனப்படும் சாதவாகன மன்னன் கி.பி. 78ல் துவங்கி வைத்த முறை), ஃபஸ்லி (அக்பர் அரியணை ஏறிய ஆண்டில் துவங்குவது. அறுவடையை மையமாகக் கொண்ட காலக் கணிப்பு முறை), ஹிஜ்ரி (இஸ்லாமிய காலக்கணிப்பு முறை) என்று நீளும் கணக்கீட்டு முறைகளில் இந்த சம்வத்சரம் எனப்படும் 60 ஆண்டு சுழற்சி முறையும் ஒன்றாக இருந்தது. இது தவிர, தமிழ்நாட்டில் திருவள்ளுவர் ஆண்டு என்ற கணக்கீட்டு முறை தமிழ்நாடு அரசால் பின்பற்றப்படுகிறது. கிரிகேரியன் நாட்காட்டியோடு ஒப்பிட்டால், திருவள்ளுவர் ஆண்டு 31 ஆண்டுகள் அதிகமாக இருக்கும். உதாரணமாக, 2023ஆம் ஆண்டு என்பது திருவள்ளுவர் ஆண்டில் 2054ஆம் ஆண்டாகும். 1972 முதல் இது தமிழ்நாடு அரசின் அதிகாரபூர்வ ஆண்டு முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது.

மற்ற கணக்கீட்டு முறைகளுக்கும் சம்வத்சர முறைக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு. மற்ற ஆண்டு முறைகள், தொடர்ச்சியான எண்களைக் கொண்டவை. ஆனால், இந்த சம்வத்சர முறை, எண்களுக்குப் பதிலாக 60 பெயர்களைப் பயன்படுத்துகிறது. ஆகவே, 60 ஆண்டுகள் முடிந்த பிறகு, மீண்டும் முதலில் இருந்து அந்தப் பட்டியல் துவங்கும். இந்தப் பட்டியலில் முதல் பெயர் 'பிரபவ' என்று துவங்குகிறது. 'அக்ஷய' என்ற பெயரோடு இந்தப் பட்டியல் முடிவுக்கு வருகிறது.

வராகமிக்ரர் எழுதிய வானியல் நூலான பிருகத் சம்ஹிதையில்தான் (கி.பி. 505 - 587) முதன்முதலாக, இந்த 60 பெயர்களும் நாம் இப்போது பயன்படுத்தும் வரிசையில் காணப்படுகின்றன. சம்வத்சரம் என்பது ஒரு ஆண்டைக் குறிக்கிறது. ஆனால், 'வருஷ' என்ற வார்த்தையால் குறிக்கப்படும் ஆண்டிற்கும் 'சம்வத்சரம்' என்ற வார்த்தையால் குறிக்கப்படும் ஆண்டிற்கும் வித்தியாசம் உண்டு. 'வருஷம்' என்பது பூமியின் ஒரு சூரிய வருடத்தைக் குறிக்கிறது. ஆனால், 'சம்வத்சரம்' என்பது வியாழனின் சுழற்சியை மையமாகக் கொண்டது. அதாவது, ஒரு சம்வத்சர ஆண்டு என்பது 361.026721 நாட்களைக் கொண்டது. பூமியை அடிப்படையாகக் கொண்ட சூரிய ஆண்டைவிட, 4.232 நாட்கள் குறைவு. இதனைச் சரிசெய்ய, ஒவ்வொரு 85 சம்வத்சர ஆண்டுகளுக்கும் ஒரு முறை, இந்த 60 பெயர்களில் ஒன்று தாண்டிச் செல்லப்படும். அதாவது அந்த ஆண்டு 'பிரபவ' என்ற பெயர் சூட்டப்படவிருந்தால், அதற்கு அடுத்த பெயரான 'விபவ' என்ற பெயர் சூட்டப்படும். ஆனால், காலப்போக்கில் இது கைவிடப்பட்டது. சம்வத்சரமும் வருஷமும் ஒரே காலகட்டத்தைக் குறிப்பதாக மாறிவிட்டன.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14ஆம் தேதி நெருங்கும்போது, தமிழ் ஆண்டுகளுக்கு சமஸ்கிருதப் பெயர்களைப் பயன்படுத்துவது குறித்து எதிர்ப்புக் குரல்கள் எழுகின்றன. இதனை அப்படிப் பார்க்கத் தேவையில்லை என்கிறார்கள் தமிழ் ஆய்வாளர்கள்.

"தமிழ் இங்கிருந்து வந்ததாகவும் சமஸ்கிருதம் வெளியில் இருந்து வந்ததாகவும் சொல்லி, இந்த எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள். தமிழ்நாட்டில் சங்க காலத்திலேயே சமஸ்கிருதமும் தமிழும் நெருக்கமாக இருந்திருக்கின்றன. இரு மொழிகளுக்கும் இடையில் ஒரு நீண்ட காலத் தொடர்பு இருக்கிறது. தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் தொடர்பில்லை என்பவர்கள் மொழியியலாளர்கள் அல்ல. அவர்கள் தாம் சார்ந்திருக்கும் அரசியல் சித்தாந்தம் சார்ந்து அந்தக் கருத்தைச் சொல்கிறார்கள். ஆகவே இந்தப் பெயர்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு நீண்ட காலத் தொடர்ச்சி இருக்கிறது" என்கிறார்கள்.  "கல்வெட்டுகளைப் பொறித்த மன்னர்கள் இதில் தெளிவாக இருந்தார்கள். அவர்கள் இந்த சுழற்சி ஆண்டைக் குறிப்பிட்டாலும் சக ஆண்டு, சாலிவாகன ஆண்டு போன்ற பிற ஆண்டுகளையும் சேர்த்தே குறிப்பார்கள். இதனால், அவர்கள் எந்த வருடத்தைச் சொல்கிறார்கள் என்பதில் குழப்பம் கிடையாது. ஆனால், 19ஆம் நூற்றாண்டில் பதிப்பாளர்களாக இருந்தவர்கள், தங்கள் புத்தகங்களில் கிரிகேரியன் ஆண்டையோ, வேறு ஆண்டையோ குறிக்காமல், வெறும் இந்தப் பெயர்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இப்போது 150 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், இவை குழப்பத்தை ஏற்படுத்துகின்றன" என்கிறார்கள்.

ஆனால், காலத்தைக் குறிப்பிட தங்களுக்கென தொடர்ச்சியான ஒரு ஆண்டு முறையை தமிழர்கள் ஏன் உருவாக்கவில்லை என்பது ஒரு சுவாரஸ்யமான கேள்வி.

Coutesy : BBC

தென்கலை - வடகலை பஞ்சாயத்துதான் என்ன?

இன்று சைவம் - வைணவம் ஆகிய இரு மதங்களே இந்தியாவின் பெரும்பான்மை மதங்களாக உள்ளன. இந்த இரண்டு மதங்களுடன் "ஸ்மார்த்தம்"  எனும் வட வேத ...